ஞாயிறு, 19 டிசம்பர், 2010

மார்க்க வியாபாரிகள்

மார்க்க வியாபாரிகள்

அழைப்பாளர்கள் சிந்திக்கட்டும்


وَآمِنُواْ بِمَا أَنزَلْتُ مُصَدِّقاً لِّمَا مَعَكُمْ وَلاَ تَكُونُواْ أَوَّلَ كَافِرٍ بِهِ وَلاَ تَشْتَرُواْ بِآيَاتِي ثَمَناً قَلِيلاً وَإِيَّايَ فَاتَّقُونِ

உங்களிடமிருப்பதை (வேதத்தை) உண்மைப் படுத்தும் விதமாக நான் அருளியதை (குர்ஆனை) நம்புங்கள்! அதை மறுப்பவர்களில் முதன்மையானவராக நீங்கள் ஆகிவிடாதீர்கள்! எனது வசனங்களை அற்பக்கிரயத்திற்கு விற்று விடாதீர்கள்! என்னையே அஞ்சுங்கள்!(அல்குர்ஆன் 2:41)

தங்கள் மார்க்கத்தையும் வேதத்தையும் வியாபாரப் பொருட்களாக ஆக்கிவிட்ட நபி(ஸல்) காலத்து யூத கிறித்தவர்களை நோக்கி இந்த வசனம் பேசுகின்றது. இந்த கருத்தில் இன்னும் பல வசனங்களும் உள்ளன. (பார்க்க 5:44, 3:187, 3:199)

இவ்வசனங்கள் நேரடியாக இவ்விரு சமுதாயங்களைக் குறிப்பிட்டாலும் வேதத்தை வியாபாரமாக்கும் முஸ்லிம்களும் இதில் அடங்குவார்கள் என்பதை அறிவுடையோர் மறுக்க மாட்டார்கள். இறைவனின் இந்தத் தெளிவான கட்டளை அப்பட்டமாக அலட்சியப்படுத்தப்படும் நிலையை முஸ்லிம்களிடம் நாம் காண்கிறோம். முஸ்லிம் சமுதாயத்தில் பெரும் பகுதியினர் மார்க்கத்தையும், வேதத்தையும் விற்பவர்களாகவோ விலைக்கு வாங்குபவர்களாகவோ இருப்பதையும் காணமுடிகின்றது.

இதற்குக் காரணம் என்ன? இந்த வசனம் தவறாக புரிந்து கொள்ளப்பட்டிருக்கவேண்டும். அல்லது அறவே இவ்வசனங்கள் புரிந்து கொள்ளப்படாமலிருக்க வேண்டும். இந்த இரண்டு காரணங்களைத் தவிர வேறு எதுவும் காரணமாக இருக்க முடியாது.

வேதத்தையும் அந்த வேதம் கற்றுத்தரும் மார்க்கத்தையும் அந்த மார்க்கத்தில் வலியுறுத்தப்படும் வணக்கங்களையும் வியாபாரமாக்கி விட்டார்கள். அந்த வியாபாரத்தையும் நியாயப்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளதை நாம் காண்கிறோம். அதற்கு சில ஆதாரங்களையும் வாதங்களையும் முன் வைக்கின்றனர். அவற்றைப் பார்த்து விட்டு இந்த வசனத்தின் சரியான விளக்கத்தைக் காண்போம்.

நபித்தோழர்களில் சிலர் ஒரு தண்ணீர்த் துறையைக் கடக்கலானார்கள். அந்தத் தண்ணீர்த் துறைக்குரியவர்களில் ஒருவர் விஷக்கடிக்கு ஆளாகி விட்டார். உடனே அவர்கள் நபித்தோழர்களிடம் வந்து 'உங்களில் மந்திரிப்பவர் எவருமுண்டோ?' என்று கேட்டார்கள். உடனே நபித்தோழர்களில் ஒருவர் புறப்பட்டுச் சென்று ஆட்டுக்குக் கூலியாக ஃபாத்திஹா அத்தியாயத்தை ஓதினார். (விஷக்கடிக்கு ஆளானவர் குணமடைந்ததும்) கூலியாகப் பெற்ற ஆட்டையும் தோழர்களிடம் கொண்டு வந்தார். அவர்கள் அதிருப்தியுற்று அல்லாஹ்வின் வேதத்துக்குக் கூலி வாங்கி விட்டீரே என்று கூறினர். முடிவில் மதீனாவுக்கு வந்து 'அல்லாஹ்வின் தூதரே! இந்த மனிதர் அல்லாஹ்வின் வேதத்துக்குக் கூலி பெற்று விட்டார்' எனக் கூறினார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள் 'நீங்கள் கூலி பெறத் தகுதியானது அல்லாஹ்வின் வேதமாகும்' எனக் கூறினார்கள். இப்னு அப்பாஸ்(ரலி) அறிவிக்கும் இந்த ஹதீஸ் புகாரியில் இடம் பெற்றுள்ளது.

மற்றொரு அறிவிப்பில் மந்திரிக்கச் சென்ற நபித்தோழர், அவர்களிடம் சில ஆடுகள் தர வேண்டும் என்று பேரம் பேசி அல்ஹம்து அத்தியாயத்தை ஓதிப்பார்த்ததாகவும், அவர் உடனடியாக நிவாரணம் பெற்றதும் பேசியபடி ஆடுகளைப் பெற்றதாகவும், அதைப் பங்கு வைக்குமாறு சிலர் கூறியதாகவும் அப்போது மந்திரித்தவர், 'நபி(ஸல்) அவர்களிடம் சென்று இதைக் கூறி அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை அறியாமல் நாம் பங்கு வைக்க வேண்டாம்' என்று கூறியதாகவும் அவ்வாறே நபி(ஸல்) அவர்களிடம் வந்து விபரம் கூறிய போது 'அந்த அத்தியாயம் ஓதிப்பார்க்கத்தக்கது என்று உமக்கு எப்படித் தெரியும்? என்று கேட்டு விட்டு 'நீங்கள் செய்தது சரியானதே! அதைப் பங்கு வையுங்கள்! எனக்கும் ஒரு பங்கைத் தாருங்கள்!' என்ற கூறி சிரித்ததாகவும் கூறப்படுகின்றது. அபூஸயீத்(ரலி) அறிவிக்கும் இந்த ஹதீஸ் புகாரி, முஸ்லிம், அஹ்மத், அபூதாவூத், திர்மிதி, இப்னுமாஜா ஆகிய நூல்களில் இடம் பெற்றுள்ளது.

காரிஜா இப்னுஸ் ஸல்த் என்பவரின் சிறிய தந்தை நபி(ஸல்) அவர்களைச் சந்தித்து விட்டு திரும்பும் போது ஒரு கூட்டத்தினரைக் கடந்தார்கள். அவர்களில் இரும்பு (சங்கிலியால்) கட்டப்பட்ட ஒரு பைத்தியக்காரர் இருந்தார். அவரது குடும்பத்தினர் அந்த நபித்தோழரை நோக்கி 'உங்கள் தோழராகிய நபி(ஸல்) சிறந்த மார்க்கத்தைக் கொண்டு வந்துள்ளதாக அறிகிறோம். இந்தப் பைத்தியத்திற்கு உங்களிடம் ஏதேனும் வைத்தியம் உண்டா? என்றனர். அந்த நபித்தோழர் ஒவ்வொரு நாளும் இரண்டு தடவை வீதம் மூன்று நாட்கள் ஃபாத்திஹா அத்தியாயத்தை ஓதிப் பார்த்தார். பைத்தியம் விலகியது. அவர்கள் அவருக்கு இருநூறு ஆடுகள் தந்தார்கள். அவர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து இதைக் கூறிய போது 'அதை நீ வைத்துக் கொள்! தவறாக ஓதிப் பார்த்து உண்பதை விட இது சத்தியத்தை ஓதிப்பார்த்த கூலியாகும்' என்றார்கள். காரிஜா அறிவிக்கும் இந்த ஹதீஸ் அஹ்மத், நஸயீ, அபூதாவூத், இப்னு ஹிப்பான், ஹாகிம் ஆகிய நூல்களில் இடம் பெற்றுள்ளது.

வீடு வீடாகச் சென்று குர்ஆன் ஓதிவிட்டு கூலி வாங்கலாம். ரமளானில் குர்ஆன் ஓதி தொழ வைப்பதற்கு கூலி வாங்கலாம். தொழ வைப்பதற்கு சம்பளம் வாங்கலாம் என்பதற்கு இந்த ஹதீஸ்களை ஆதாரங்களாகச் சமர்ப்பிக்கின்றனர். குர்ஆனுக்குக் கூலி வாங்கலாம் என்று இந்த ஹதீஸில் தெளிவாகவே கூறப்படுவதால் இவ்வாறு அவர்கள் கூறுகின்றனர். அவர்கள் எடுத்து வைக்கும் வேறு சில ஆதாரங்களையும் நாம் காண்போம்.

ஒரு பெண் நபி(ஸல்) அவர்களிடம் வந்து தன்னை நபி(ஸல்) அவர்களிடம் ஒப்படைத்தார். அப்போது ஒரு மனிதர் எழுந்து தங்களுக்குத் தேவையில்லை என்றால் இப்பெண்ணை எனக்கு மணமுடித்து வையுங்கள் என்றார். அவளுக்கு மஹராக வழங்க ஏதும் உம்மிடம் உள்ளதா? என்று நபி(ஸல்) கேட்டார்கள். அதற்கு அவர் 'இந்த எனது ஆடையைத் தவிர என்னிடம் வேறு ஏதும் இல்லை என்றார். அதற்கு நபி(ஸல்) அவர்கள் நீ உனது ஆடையை அவளுக்குக் கொடுத்தால் ஆடையே இல்லாமல் நீ இருக்க வேண்டி வரும். எனவே வேறு எதையாவது தேடுவீராக என்றனர். அதற்கு அவர் எனக்கு ஏதும் கிடைக்கவில்லை என்றார். அப்படியானால் ஒரு இரும்பு மோதிரத்தையாவது தேடுவீராக என்று நபி(ஸல்) கூறினார்கள். அவர் எதுவும் கிடைக்கவில்லை என்றார். குர்ஆனில் உமக்கு ஏதேனும் தெரியுமா? என நபி(ஸல்) கேட்டார்கள். இன்னின்ன அத்தியாயங்கள் தெரியும் என்று அந்த அத்தியாயங்களின் பெயர்களை அவர் குறிப்பிட்டார். உம்மிடம் இருக்கும் குர்ஆன் அத்தியாயங்களுக்காக உமக்கு நான் மணமுடித்துத் தந்தேன் என்று கூறினார்கள். லஹ்ல் பின் ஸஃது(ரலி) அறிவிக்கும் இந்த ஹதீஸ் புகாரி, முஸ்லிம் ஆகிய நூல்களில் இடம் பெற்றுள்ளது.

மணப்பெண்ணுக்கு மஹர் தொகையாக நபி(ஸல்) அவர்கள் குர்ஆனையே ஆக்கியுள்ளதால் குர்ஆன் மற்ற பொருட்களைப் போலவே நபி(ஸல்) அவர்களால் கருதப்பட்டுள்ளது. எனவே குர்ஆனுக்குக் கூலி வாங்கலாம் என்பதும் இவர்களின் வாதம்.

எனக்கு நபி(ஸல்) அவர்கள் பாங்கைக் கற்றுத் தந்தனர். அவர்கள் கற்றுத் தந்தவாறு பாங்கு சொல்லி முடித்ததும் எனக்கு ஒரு பை தந்தனர். அதில் சிறிதளவு வெள்ளி இருந்தது என்று அபூமஹ்தூரா(ரலி) அறிவிக்கும் ஹதீஸ் நஸயீ, இப்னு ஹிப்பான் ஆகிய நூல்களில் இடம் பெற்றுள்ளது.

பாங்கு என்பது ஒரு வணக்கம். இந்த வணக்கத்தை செய்து முடித்தபோது நபி(ஸல்) அவர்கள் அவருக்கு கூலி கொடுத்திருப்பதால் வணக்கங்களுக்கும் வேதத்துக்கும் கூலி வாங்கலாம் என்பதும் இவர்களின் வாதம்.

இந்த ஹதீஸ்கள் யாவும் ஆதாரப்பூர்வமானவை என்பதில் ஐயமில்லை. இவர்கள் கூறுவது தான் இதன் விளக்கம் என்றால் மேற்கண்ட வசனத்திற்கு எந்த அர்த்தமும் இல்லாமல் போய்விடும். மேலும் பின்வரும் ஹதீஸ்களுக்கும் எந்த அர்த்தமும் இல்லாமல் போய் விடும்.

குர்ஆனை ஓதுங்கள்! அதில் வரம்பு மீறாதீர்கள்! அதை அலட்சியப்படுத்தாதீர்கள்! அதன் மூலம் சாப்பிடாதீர்கள். அதன் மூலம் (பொருளையும் புகழையும்) பெருக்கிக் கொள்ளாதீர்கள் என்று நபி(ஸல்) கூறியதாக அப்துர்ரஹ்மான் பின் ஷிப்ல்(ரலி) அறிவிக்கும் ஹதீஸ் அஹ்மதில் இடம் பெற்றுள்ளது.

நாங்கள் குர்ஆனை ஓதிக் கொண்டிருந்த போது எங்களிடம் நபி(ஸல்) வந்தார்கள். எங்களில் அரபியரும் அரபியல்லாதவரும் இருந்தோம். அப்போது நபி(ஸல்) அவர்கள் எல்லோருமே (அதாவது இரண்டு சாரார் ஓதுவதும்) அழகாகத்தான் உள்ளது. அம்பு (வளைவின்றி நேராக ஆக்கப்படுவது) போல் குர்ஆனை நேராக ஆக்கும் கூட்டத்தினர் தோன்றுவார்கள். (அதாவது உச்சரிப்புகள் ராகங்கள் ஆகியவற்றுக்கு அதிக முக்கியத்துவம் அளிப்பார்கள்) அவர்கள் (இம்மையிலேயே) அதன் கூலியை அவசரமாகத் தேடுவார்கள். மறுமைக் கூலிக்காகக் காத்திருக்க மாட்டார்கள் என்று நபி(ஸல்) கூறினார்கள். ஜாபிர்(ரலி) அறிவிக்கும் இந்த ஹதீஸ் அபூதாவூதில் இடம் பெற்றுள்ளது. இதே கருத்தை ஸஹ்ல் பின் ஸஃது(ரலி) அறிவிப்பதாகவும் அபூதாவூதில் இடம் பெற்றுள்ளது.

தமது பாங்குக்காக கூலி எதுவும் பெறாத முஅத்தினை நீ ஏற்படுத்துவாயாக என்பதே நபி(ஸல்) அவர்கள் என்னிடம் எடுத்துக் கொண்ட உடன்படிக்கையில் இறுதியானதாகும் என்று உஸ்மான் பின் அபில் ஆஸ்(ரலி) அறிவிக்கும் ஹதீஸ் அஹ்மத், அபூதாவூது, நஸயீ, திர்மிதி, இப்னுமாஜா, ஹாகிம் ஆகிய நூல்களில் இடம் பெற்றுள்ளது.

இந்த ஹதீஸ்கள் வணக்கங்களுக்கோ குர்ஆனுக்கோ இவ்வுலகக் கூலியைப் பெறலாகாது என்று அறிவிக்கின்றன. இவ்விரண்டு வகையான ஹதீஸ்களையும் இணைத்துத் தான் நாம் ஒரு முடிவுக்கு வரவேண்டும்.

குர்ஆன் சம்பந்தமாக எந்தவித கூலியும் பெறக்கூடாது என்றால் முதல் வகையிலான ஹதீஸ்களை மறுக்கும் நிலை ஏற்படும். குர்ஆனை எந்தவிதத்தில் பயன்படுத்தினாலும் கூலி வாங்கலாம் என்றால் இரண்டாம் வகையிலான ஹதீஸ்களை மறுக்கும் நிலை ஏற்படும். இரண்டு வகையிலான ஹதீஸ்களில் எதையும் மறுக்காமல் பொதுவான விளக்கத்துக்கு வருவது சிரமமானதல்ல. இரண்டு வகையான ஹதீஸ்களையும் நாம் சிந்திக்கும் போது இதை விளங்கலாம்.

குர்ஆன் ஓதுவது என்பது இரண்டு வகைகளில் அமைகின்றது. ஒன்று மனிதனுக்கு உதவுவதற்காக ஓதிப்பார்த்தல் போன்ற வழிகளில் பயன்படுத்துவது. மற்றொன்று மறுமைப் பயன் கருதி ஓதுவது. முதல் வகையில் பயன்படுத்தும் போது கூலி வாங்கலாம் என்பதை முதல் ஹதீஸ்கள் கூறுகின்றன. இரண்டாவது வகையில் பயன்படுத்தினால் கூலி வாங்கக் கூடாது என்பதை இரண்டாவது வகை ஹதீஸ்கள் கூறுபின்றன என்று விளங்கிக் கொண்டால் முரண் ஏதுமில்லை.

குர்ஆனை அச்சிட்டு விற்பனை செய்வதும் அதன் தமிழாக்கத்தை அச்சிட்டு விற்பதும் அதன் போதனைகளை அச்சிட்டு விற்பதும் குர்ஆனை விற்பது என்பதில் அடங்காது. வணக்க வழிபாடுகளுக்கு கூலி வாங்குவதுடன் இதை ஒப்பு நோக்க முடியாது. அச்சுத் தொழில், புத்தக விற்பனை என்பது தொழில் என்ற முறையில் முதலீடு செய்யப்படுகின்றது. அச்சிடுவோர், அச்சுக்கோர்ப்போர், பைண்டிங் செய்வோர் ஆகியோருக்கு சம்பளம் கொடுக்கப்படுகின்றது.

தொழில் என்ற முறையில் தான் இதை எடுத்துக் கொள்ள வேண்டுமே தவிர குர்ஆனை விற்பது என்ற குற்றத்தில் அடங்காது. வீடுவீடாகப் போய்க் குர்ஆனை ஓதுவதற்கும் ரமளானில் தொழுகை நடத்துவதற்கும் எந்த முதலீடும் செய்யப்படுவதில்லை. அது முற்றிலும் கலப்பற்ற வணக்கமாகும். இந்த வணக்கத்தைச் செய்து விட்டு கூலி கேட்பது குர்ஆனை விற்றதாகத்தான் அமையும்.

பாங்கு சொல்லிய பிறகு அபூமஹ்தூரா(ரலி) அவர்களுக்கு நபி(ஸல்) அவர்கள் கூலி வழங்கியுள்ளார்களே வணக்கங்களுக்கு கூலி கொடுக்கலாம் என்பதற்கு இது சான்றாக உள்ளதே என்ற கேள்வி தவறாகும்.

'கூலி வாங்காத முஅத்தினை ஏற்படுத்திக் கொள்வீராக!' என்று நபி(ஸல்) அவர்கள் தெளிவாக அறிவித்து விட்ட பிறகு நபி(ஸல்) அவர்களின் பள்ளிவாசலில் நீண்ட காலம் முஅத்தின்களாகப் பணிபுரிந்த பிலால்(ரலி) அப்துல்லாஹ் இப்னு உம்மிமக்தும்(ரலி) ஆகியோருக்கு கூலி எதுவும் கொடுக்காமலிருந்த பிறகும் நபி(ஸல்) அவர்கள் அபூமஹ்தூரா(ரலி) அவர்களுக்கு வழங்கியது எப்படி பாங்கின் கூலியாக இருக்க முடியும்?

புதிதாக இஸ்லாத்தை ஏற்றவர் என்பதால் பைதுல்மால் எனும் பொது நிதியிலிருந்து நபி(ஸல்) அவர்கள் வழங்கிய அன்பளிப்பாகவே அதைக் கருத முடியும்.

இன்னொரு கோணத்திலும் இதை நாம் சிந்திக்கலாம். வணக்கங்களுக்குக் கூலி வாங்கலாம் என்ற வாதத்தின்படி எல்லா வணக்கங்களுக்கும் கூலி வாங்கலாம் என்று ஆகும். நான் நோன்பு வைக்கப் போகிறேன். அதற்கு ஒரு நூறு ரூபாய் தாருங்கள் என்று கேட்க முடியுமா? இவ்வாறு கேட்க முடியாது என்றால் நான் தொழப்போகிறேன். அதற்கு இவ்வளவு ரூபாய் தாருங்கள் என்று எப்படிச் சொல்ல முடியும்? நோன்பைப் போலவே தொழுகையும் குர்ஆன் ஓதுவதும் வணக்கம் தானே.

மார்க்கத்தை வியாபாரமாக ஆக்குவோர் மற்றோர் புதுமையான வாதத்தையும் எடுத்து வைக்கிறார்கள்.

நாங்கள் குர்ஆன் ஓதிவிட்டு வாங்குவது குர்ஆனுடைய கூலி அல்ல. எங்கள் நேரத்தை ஒதுக்கியதற்காகவே வாங்குகிறோம். அந்த நேரத்தில் வேறு வேலை செய்து நாங்கள் பொருள் திரட்டியிருப்போமல்லவா. அதை விட்டு விட்டு இதற்காக நேரத்தை ஒதுக்கியதற்கே கூலி வாங்குகிறோம் என்கின்றனர்.

ஒரு வேலை செய்வதென்றால் நேரத்தை ஒதுக்காமல் எந்த வேலையையும் செய்ய முடியாது. இந்தச் சாதாரண உண்மையைக் கூட விளங்காமல் இவ்வாறு வாதிடுகின்றனர்.

ஒருவர் சாராயக்கடையில் கணக்கெழுதச் சென்று சம்பளம் பெறுகிறார். நான் நேரம் ஒதுக்கியதற்காகவே சம்பளம் பெறுகிறேன் என்றும் கூறுகிறார் என்றால் நாம் அதை ஏற்கமாட்டோம். மார்க்கத்தை வியாபாரமாக ஆக்கக்கூடாது என்பதும், சாராயக்கடையில் கணக்கெழுதக்கூடாது என்பதும் இரண்டுமே மார்க்கத்தின் கட்டளை தான்.

எதை வியாபாரமாக ஆக்கக் கூடாது என்று மார்க்கம் சொல்கிறதோ அந்த வழிகளில் வியாபார நோக்கத்தில் ஒருவர் நேரத்தை ஒதுக்கவும் கூடாது என்றே கொள்ள வேண்டும். இல்லை என்றால் எல்லா பித்அத்களையும் எல்லா தவறுகளையும் நியாயப்படுத்த நேரிடும்.

மஹர் சம்பந்தமான ஹதீஸிலும் மார்க்கத்தை வியாபாரமாக்கும் போக்குக்கு ஆதாரம் கிடையாது. மஹர் என்பது பெண் தீர்மானிக்க வேண்டிய விஷயம். ஒரு பெண் எவ்வளவு கூடுதலாகவும், குறைவாகவும் மஹர் கேட்கலாம். விரும்பினால் தனக்கு மஹர் எதுவும் வேண்டாம் என்றும் கூறலாம். சம்பந்தப்பட்ட ஹதீஸில் அப்பெண்மணி தனக்குள்ள இந்த உரிமையை நபி(ஸல்) அவர்களின் கையில் ஒப்படைத்து விட்டார்.

நபி(ஸல்) அவர்கள் இயன்றவரை அவரிடம் மஹர் பெற முயற்சிக்கிறார்கள். இரும்பு மோதிரமாவது கொண்டு வா என்ற அளவுக்கு இறங்கி வருகிறார்கள். எதுவும் இல்லை என்ற நிலையில் அவர் குர்ஆனை அறிந்தவர் என்பதால் மஹர் இல்லாமல் அவருக்கு மணமுடித்துக் கொடுக்கிறார்கள்.

நல்ல குணமுடைய ஒரு மணமகன் கிடைக்கும் போது 'உங்கள் நற்குணமே போதும் மஹர் வேண்டாம்' என்று ஒரு பெண் கூறினால் நற்குணம் விலை பேசப்பட்டு விட்டது என்று எப்படி கருத முடியாதோ அது போன்றது தான் இதுவும். இதையெல்லாம் மார்க்கத்தை வியாபாரமாக்குவதற்கு சான்றாகக் காட்ட முடியாது.

வணக்கமாக அமைந்துள்ள இடங்களில் குர்ஆனைப் பயன்படுத்திவிட்டு கூலி கேட்கக் கூடாது. யூத கிறித்தவர்கள் அன்று வேதத்தையும் அதன் போதனைகளையும் மறைத்து விட்டு அதன் மூலம் உலக லாபங்களை அடைந்து வந்தனர். அது கூடாது என்பது தான் மேற்கண்ட வசனத்தின் பொருள் என்பதை அறிந்து கொண்டால் குழப்பங்களுக்கு இடமில்லை.

திங்கள், 1 மார்ச், 2010

அப்துல்லாஹ்வின் மகன் கல்கி


கல்கி



ஹிந்துக்களின் வேதாகமத்தில் சொல்லப்படும், கடைசி அவதாரமான கல்கி, இறைதூதர் அப்துல்லாஹ்வின் மகன் முஹம்மதாவார்.

இதை நான் சொல்லவில்லை, சமீபத்தில் ஹிந்தி மொழியில் வெளிவந்த புத்தகத்தின் சாராம்சமாகும். இந்த நூல் வெளியானபின், இந்தியாவே ஒரு கலங்கு கலங்கி விட்டது என்றால் மிகையல்ல. இதை ஒரு இஸ்லாமியர் எழுதியிருந்தால், அவர் இந்நேரம் சிறையிலடைக்கப்பட்டிருப்பதோடு, அந்த புத்தகத்தையும் தடை செய்திருப்பார்கள்.

ஆனால், கல்கி அவதாரத்தைப் பற்றிய இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டு, “பிரபஞ்ச இறைத்தூதின் வழிகாட்டி” என்னும் இந்த புத்தகம், வங்காளத்தில் இருந்து வெளிவந்ததாகும். இது அலஹாபாத் பல்கலைக்கழகத்தில் ஒரு முக்கிய அத்தாட்சியாக இருக்கிறது. இதை எழுதியது, தலைசிறந்த ஆய்வாளரான பண்டிட் வைத் ப்ரகாஷ் என்னும், ஒரு பிராமண சமஸ்கிருத பண்டிட்டாவார்.

பண்டிட் வைத் ப்ரகாஷ, பன்னெடுங்கால கடின ஆராய்ச்சி மற்றும் அயரா உழைப்பில் உருவான இப்புத்தகத்தை, இதே போல ஆய்வு செய்யும் எட்டு கல்விமான்களிடம் சமர்ப்பித்து இருக்கிறார். அவர்களும், முழுக்க இப்புத்தகத்தை படித்துணர்ந்து, பலமான ஆதாரங்களினால், இப்புத்தகத்தின் தகவல், முழுக்க முழுக்க உண்மை தான் என்று சான்றளித்துள்ளனர்.

இந்தியாவின் தலைச்சிறந்த வேதங்கள், குறிப்பிடும் தூதரும் வழிகாட்டியுமான கல்கி அவதாரம், மக்காவில் பிறந்த முஹம்மது என்னும் மாமனிதரே ஆவார். ஆதனால், ஹிந்துக்கள், இனியும் கல்கி அவதாரத்துக்காக காத்திராமல், ஆயிரத்து நானூறு வருடங்களுக்கு முன்பு, இவ்வுலகில் உதித்து, இறைத்தூதை எத்தி வைத்து, வாழ்வின் இறுதிவரை இறைபணியாற்றிய இறைவனின் கடைசி தூதரை ஏற்று இஸ்லாத்தைத் தழுவ வேண்டும். இவரது ஆராய்ச்சியின் இறையாண்மையை நிரூபிக்க, பண்டிட், தம் வேதத்திலிருந்து தக்க சான்றுகளை முன்வைக்கிறார்.

1.வேதங்கள், கல்கி அவதாரம் தான், பகவானின் இறுதித் தூதர் என்கிறது. இது, கடைசி தூதர், முஹம்மதுடைய விஷயத்தில் மட்டுமே சரியாக இருக்க முடியும்.

2.ஹிந்து வேதங்களின் முன்னறிவிப்பின் படி, கல்கி நீரினால் சூழப்பட்ட ஒரு இடத்தில் தான் அவதாரம் எடுப்பார். அது தான் ‘ஜஸீரத்துல் அரப்’ என்று சொல்லக் கூடிய கடலால் சூழப்பட்ட அரேபிய தீபகற்பமாகும்.

3.ஹிந்து புனித நூல்களில், கல்கி அவதாரத்தின் தந்தையை, விஷ்னு பகத் என்றும் தாயை சொமானிப் என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. சமஸ்கிருதத்தில் விஷ்னு என்றால், இறைவன், அதாவது அல்லாஹ் என்று பொருள். அதோடு, பகத் என்றால் அடிமை என்று அர்த்தம்.

ஆக, விஷ்னு பகத் என்பது, அல்லாஹ்வின் அடிமை அதாவது அரபியில், அப்துல்லாஹ் என்னும் பதத்தைத் தருகிறது. சொமானிப் என்ற சமஸ்கிருத வார்த்தைக்கு, சாந்தமான அமைதி என்று பொருள். அரபியில் ஆமினா என்ற வார்த்தைக்கும் இதே அர்த்தம் தான். ஆக, இறுதித் தூதர் முஹம்மதின் பெற்றோர் அப்துல்லாஹ் மற்றும் ஆமினா என்பது, உறுதிப்படுகிறது.

4.அதோடு, கல்கி அவதாரம், ஆலிவ் மற்றும் பேரித்தங்கனிகளை உண்டு வாழ்வார் என்றும், வார்த்தை தவறாத நேர்மையாளராக இருப்பார் என்றும் ஹிந்துக்களின் புத்தகங்களில் உள்ளது. ஆக, இது முஹம்மதின் விஷயத்தில் உண்மையாகிறது என்பதாக பண்டிட் ப்ரகாஷ் எழுதுகிறார்.

5.கல்கி அவதாரம் உயர்ந்த மதிப்பு மிக்க குலத்தில் பிறப்பார் என்று வேதங்கள் சொல்கின்றன.. இதுவும், மிக உயரிய, மதிப்புமிக்க குறைஷி குலத்தில் பிறந்ததால், முஹம்மதுடைய விஷயத்தில் சரியாகிறது.

6.கல்கி அவதாரத்துக்கு, ஒரு குகையில் இறைவனின் ஏவலர் மூலமாக ஞானம் கிடைக்கும் என்பதாக வந்துள்ளது. ஆக, மக்காவிலேயே, அல்லாஹ்வின் தூதர் ஜிப்ரீல் மூலமாக ஹீரா குகையில் ஞானம் பெற்றது முஹம்மது ஒருவர் தான்.

7.மேலும், கல்கி அவதாரத்துக்கு காற்றின் வேகத்தில் பறக்கும் குதிரை வழங்கப்படுமென்றும், அதன் மூலம் அவர், இவ்வுலகத்தையும், ஏழு வானத்தையும் சுற்றி வருவார் என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. ‘மிஃராஜ்’ இரவில், ‘புராக்’ வாகனத்தில் தூதர் முஹம்மது பயணமானது, இதைத்தானே சொல்கிறது?

8.அதோடு, கல்கி அவதாரத்துக்கு இறைவனின் உதவி பெருமளவில் இருக்கும் எனவும், இறைவனால் வலுவூட்டப்படுவார் எனவும் புத்தகங்களில் வந்துள்ளது. முஹம்மதுக்கு, பத்ரு போர்க்களத்தில், இறைவனின் உதவி நேரடியாக தன் ஏவலர்கள் மூலம் இறங்கியது நம் எல்லாருக்கும் தெரிந்த விஷயம் தான்.

9.மேலும் சில விஷயங்கள் வேதங்களில் குறிப்பிடப்படுகின்றன. அதாவது, கல்கி அவதாரம், குதிரையேற்றத்திலும், அம்பெய்துவதிலும், வாள் பயிற்சியிலும் சிறந்து விளங்குவார்.. இந்த இடத்தில், பண்டிட் வைத் ப்ரகாஷ் என்ன சொல்கிறார் என்பது, அதி முக்கியமான, கவனத்தில் கொள்ளத் தக்க விஷயமாகும். அதாவது, குதிரை, வாள் மற்றும் ஈட்டிகளின் காலம் வெகு நாட்களுக்கு முன்பே போய் விட்டது, தற்போது, நவீன ஆயுதங்களான, துப்பாக்கிகள், பீரங்கிகள், ஏவுகணைகள் என போர்முறை முற்றிலும் மாறி விட்டது. அதனால், வாளுடனும் வில்லுடனும் போராடக்கூடிய கல்கி இனிமேல் அவதாரமெடுப்பார் என்று இனியும் நம்பிக்கொண்டிருப்பது அர்த்தமற்றது. உண்மையில், வேதங்களில் குறிப்பிடப்பட்டிருக்கும் கல்கி அவதாரம் என்பது, புனித குர்ஆன் வழங்கப்பட்ட தூதர் முஹம்மதேயன்றி வேறில்லை என்பது மிகத் தெளிவாக தெரிகிறது.

பேராசிரியர் பண்டிட் வைத் ப்ரகாஷ் எழுதியதை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தது மீர் அப்துல் மஜீத்.

சனி, 30 ஜனவரி, 2010

கூட்டுக் குடும்பமும் கூடாத நடைமுறைகளும்

கூட்டுக் குடும்பமும் கூடாத நடைமுறைகளும்

இஸ்லாம் என்பது புற வாழ்க்கையிலும் அக வாழ்க்கையிலும் ஒழுக்க மாண்புகளைக் கற்றுத் தரக் கூடிய மார்க்கமாகும். ஒரு மனிதன் தன்னுடைய வாழ்வை சொர்க்கத்திற்குரிய வாழ்வாக அமைத்துக் கொள்ள வேண்டும் என்றால் அவனுடைய வெளிப்புற வாழ்க்கை மட்டுமல்லாது தன்னுடைய சுற்றத்தினரோடு கலந்து வாழ்கின்ற வாழ்க்கையையும் ஒழுக்கமான வாழ்க்கையாக அமைத்துக் கொள்ள வேண்டும். நம் தமிழகத்தைப் பொறுத்த வரை பெரும்பான்மையான முஸ்லிம்கள் கூட்டுக் குடும்பமாகத் தான் வாழ்ந்து வருகின்றனர். கூட்டுக் குடும்ப வாழ்க்கையில் பலவிதமான நன்மைகள் நிறைந்து காணப்பட்டாலும் வெறுக்கத்தக்க வகையில் தீமைகளும் நிறைந்து தான் காணப்படுகின்றன.
கூட்டுக் குடும்பமாக நாம் வாழ்ந்து வந்தாலும் அதில் மார்க்கம் கூறுகின்ற ஒழுக்க மாண்புகளை முறையாகப் பேணிப் பின்பற்றினால் இது போன்ற ஒழுக்கச் சீர்கேடுகளிலிருந்தும் நம் சமுதாயத்தைப் பாதுகாத்துக் கொள்ளலாம்.



தங்கை உறவா? தடுக்கப்பட்ட உறவா?
கூட்டுக் குடும்ப வாழ்க்கையில் பெரியப்பா, சித்தப்பாமார்களின் பெண் மக்களை உடன் பிறந்த அக்கா, தங்கை போன்று கருதி அவர்களோடு நெருங்கிப் பழகி வருகின்றனர். வீடுகளில் தனிமையில் அவர்களோடு பேசிக் கொண்டிருப்பது, வாகனங்களில் பின்னால் வைத்து அழைத்துச் செல்வது போன்று பல விதங்களில் கலந்து பழகி வருகின்றனர். இத்தகைய பழக்க வழக்கங்கள் பல நேரங்களில் அவர்களுக்கு மத்தியில் தவறான தொடர்புகள் ஏற்படுவதற்குக் காரணமாகவும் அமைந்து விடுகின்றது. ஒரு தாய் வயிற்றில் பிறந்தவர்கள் அல்லது ஒரு தந்தைக்குப் பிறந்தவர்கள் மற்றும் பால்குடிச் சகோதரர்களுக்கு மத்தியில் தான் அண்ணன் தங்கை உறவு ஏற்படுமே தவிர மார்க்க அடிப்படையில் வேறு யாருக்கு மத்தியிலும் அண்ணன் தங்கை உறவு ஏற்படாது.

திருமணம் செய்வதற்கு தடுக்கப் பட்ட உறவுகளை திருமறைக் குர்ஆன் விவரித்துள்ளது. இந்த உறவினர்களை மணக்க அனுமதியில்லை.

ஆண்கள் மணமுடிக்கக் கூடாத உறவுகள்
1. தாய், 2. மகள், 3. சகோதரி, 4.தாயின் சகோதரி, 5. தந்தையின் சகோதரி, 6. சகோதரனின் புதல்விகள், 7. சகோதரியின் புதல்விகள், 8. பாலூட்டிய அன்னையர், 9. பாலூட்டிய அன்னையின் புதல்விகள், 10. மனைவியின் தாய், 11. மனைவியின் புதல்வி, 12. மகனின் மனைவி, 13. இரு சகோதரிகளை ஒரே காலத்தில் மனைவியராக்குதல்

பெண்கள் மணமுடிக்கக் கூடாத உறவுகள்
1. தந்தை 2. மகன் 3. சகோதரன் 4. தாயின் சகோதரன் 5. தந்தையின் சகோதரன் 6. சகோதரனின் மகன் 7. சகோதரியின் மகன் 8. பாலூட்டிய அன்னையின் கணவன் 9. பாலூட்டிய அன்னையின் மகன் 10. கணவனின் தந்தை 11. கணவனின் புதல்வன் 12. புதல்வியின் கணவன் 13. சகோதரியின் கணவனை, சகோதரியுடன் வாழும் போது மணப்பது ஆகியவை தடுக்கப்பட்டுள்ளன.

திருக்குர்ஆன் 4:23 வசனத்திலிருந்து இதை அறியலாம்.

உங்கள் அன்னையர், உங்கள் புதல்வியர், உங்கள் சகோதரிகள், உங்கள் தந்தையரின் சகோதரிகள், உங்கள் அன்னையின் சகோதரிகள், சகோதரனின் புதல்விகள், சகோதரியின் புதல்விகள், உங்களுக்குப் பாலூட்டிய அன்னையர், பால்குடிச் சகோதரிகள், உங்கள் மனைவியரின் அன்னையர், நீங்கள் தாம்பத்தியம் நடத்திய மனைவிக்குப் பிறந்த உங்கள் பொறுப்பில் உள்ள மனைவியின் புதல்விகள், ஆகியோர் (மணமுடிக்க) விலக்கப்பட்டுள்ளனர். நீங்கள் உங்கள் மனைவியருடன் உடலுறவு கொள்ளா(த நிலையில் விவாக ரத்துச் செய்து) விட்டால் (அவர்களின் புதல்விகளை மணப்பது) உங்களுக்குக் குற்றமில்லை. உங்களுக்குப் பிறந்த புதல்வர்களின் மனைவியரும், (விலக்கப்பட்டுள்ளனர்.) இரு சகோதரிகளை ஒரே நேரத்தில் மணந்து கொள்வதும் (விலக்கப்பட்டுள்ளது). நடந்து முடிந்ததைத் தவிர. அல்லாஹ் மன்னிப்பவனாகவும், நிகரற்ற அன்புடையோனாகவும் இருக்கிறான். திருக்குர்ஆன் 4:23

குழந்தைப்பருவத்தில் அன்னியப் பெண்ணிடம் பால்குடித்ததால் மேற்கண்ட உறவு முறை ஏற்படுமானால் அவர்களையும் மணக்கக் கூடாது. அதாவது, குழந்தைப்பருவத்தில் ஒரு பெண்ணிடம் ஒருவன் பாலருந்தி விட்டால் அவள் தாயாகி விடுகிறாள். இதன் காரணமாக அவளது சகோதரி சின்னம்மா அல்லது பெரியம்மா ஆகி விடுவார்கள். எனவே அவரையும் மணக்கக் கூடாது.

அவளது சகோதரன் அல்லது சகோதரியின் மகளையும் மணக்கக் கூடாது. பாலூட்டிய அன்னையை பெற்ற தாய் இடத்தில் வைத்துப் பார்த்தால் அவளது உறவினர்கள் நமக்கு மேற்கண்ட உறவு முறையுடையவர்களானால் அவர்களை மணக்கக் கூடாது.

இரத்த சம்பந்தத்தால் தடுக்கப்பட்ட உறவு முறைகள், பால் அருந்திய உறவு முறையிலும் தடுக்கப்பட்டதாகும் என்பது நபிமொழி.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்: புகாரி 2451, 4719

இது தவிர ஒரு பெண்ணை மணந்து அவளுடன் வாழும் போது அவளது தாயின் சகோதரியையும் சேர்த்து மணக்கக் கூடாது. அது போல் மனைவியின் தந்தையின் சகோதரியையும் சேர்த்து மணக்கக் கூடாது.
(பார்க்க: புகாரி 4719)

மனைவி மரணித்து விட்டாலோ விவாகரத்து ஆகி விட்டாலோ மனைவியின் தாயுடைய சகோதரியை, மனைவியின் தந்தையுடைய சகோதரியை மணக்கத் தடையில்லை.

மேற்கண்ட பட்டியலில் பெரியப்பா, சித்தப்பாமார்களின் மகள்கள் இடம் பெறவில்லை. இதிலிருந்து பெரியப்பா, சித்தப்பாமார்களின் மகள்கள் அந்நியப் பெண்களே என்பதை நாம் அறிந்து கொள்ளலாம். அவர்களைத் திருமணம் செய்வது ஆகுமானதாகும்.

ஆனால் ஷாஃபி மத்ஹபினர் இதனை ஹராமாக்கி வைத்துள்ளனர். இதனை எந்த ஆலிம்களும் வெள்ளி மேடைகளில் கண்டித்து உரையாற்றுவது கிடையாது. யாராவது பேசினாலும் அவர்களை ஒரு விதமாக பார்க்கக் கூடிய நிலை தான் காணப்படுகிறது. எனவே கூட்டுக் குடும்ப வாழ்க்கையில் அந்நிய ஆணும் பெண்ணும் அண்ணன் தங்கை போன்று கலந்து வாழ்கின்ற இது போன்ற ஒழுக்கச் சீர்கேடுகள் நிகழாமல் பார்த்துக் கொள்வது மிகவும் அவசியமானதாகும்.



அண்ணி ஓர் அந்நியப் பெண்ணே
அது போன்று கூட்டுக் குடும்ப வாழ்க்கையில் அண்ணியை அன்னை போன்றோ அக்கா போன்றோ கருதி அவர்களோடு நெருங்கிப் பழகக்கூடிய நிலையும் அதிகமாகக் காணப்படுகிறது. இத்தகைய உறவும் பலவிதமான தவறுகள் நிகழ்வதற்குக் காரணமாக அமைகின்றது. இவ்வாறு கலந்துறவாடுவது மார்க்கம் காட்டுகின்ற மாண்பிற்கு எதிரானதாகும்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “(அந்நியப்) பெண்கள் இருக்குமிடத்திற்குச் செல்ல வேண்டாம் என உங்களை நான் எச்சரிக்கிறேன்” என்று கூறினார்கள். அப்போது அன்சாரிகல் ஒருவர், “அல்லாஹ்வின் தூதரே! கணவருடைய (சகோதரன் போன்ற) உறவினர்கள் (அவள் இருக்கும் இடத்திற்குச் செல்வது) குறித்து தாங்கள் என்ன கூறுகின்றீர்கள்?” என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், “கணவருடைய (சகோதரன் போன்ற) உறவினர்கள் மரணத்திற்கு நிகரானவர்கள்” என்று கூறினார்கள்
அறிவிப்பவர்: உக்பா பின் ஆமிர் (ர) நூல்: புகாரி 5232



அனுமதி கோரல்
கூட்டுக் குடும்ப வாழ்க்கையில் மார்க்கத்திற்கு எதிரான பல்வேறு நடைமுறைகள் நிறைந்து காணப்படுகின்றன. அதில் ஒன்று, வீடுகளுக்குள் நுழையும் போது பேண வேண்டிய ஒழுக்கங்கள் பின்பற்றப் படுவதில்லை.

கூட்டுக் குடும்பமாக இருந்தாலும் அதற்குரிய தனித்தன்மை காக்கப்பட வேண்டும். அண்ணன் தம்பிகள் திருமணம் செய்து ஒரே வீட்டில் வாழ்ந்தாலும் அனைவருக்கும் தனித் தனி அறைகளை ஏற்பாடு செய்து, மார்க்கம் கூறுகின்ற ஒழுக்கங்களை அங்கு மிகவும் கண்டிப்புடன் கடைப்பிடித்தால் பல்வேறு விதமான ஒழுக்கச் சீர்கேடுகள் அரங்கேறுவதை விட்டும் நம் குடும்பத்தினரை பாதுகாத்துக் கொள்ளலாம். அதில் ஒன்று தான் வீடுகளுக்குள்ளோ மற்றவரின் அறைகளுக்குள்ளோ செல்லும் போது அனுமதி பெற்றுச் செல்வதாகும்.

நம்பிக்கை கொண்டோரே! உங்கள் வீடுகள் அல்லாத வேறு வீடுகளில் அவர்களின் அனுமதி பெறாமலும் அவ்வீட்டாருக்கு ஸலாம் கூறாமலும் நுழையாதீர்கள்! இதுவே உங்களுக்குச் சிறந்தது. இதனால் பண்படுவீர்கள். (அல்குர்ஆன் 24:27)

அல்லாஹ்வின் இந்தக் கட்டளைக்கு மாற்றமாக வீட்டில் உள்ள பெண்களிடம் ஏதாவது ஓர் உறவு முறையில், ஊர் பழக்கத்திற்குத் தக்க மச்சி, மாமி, மதினி என்று கூறிக் கொண்டு உரிமையுடன் உத்தரவின்றி உள்ளே நுழைந்து விடுகின்றார்கள்.
அல்லாஹ்வின் வசனத்தின் அடிப்படையில் இது தடை செய்யப்பட்ட காரியமாகும்.

கணவன், மனைவி என இருவரும் இணைந்திருக்கும் போது, அல்லது ஆணோ, பெண்ணோ தனியாக இருக்கும் போது பல்வேறு விதமான அசவுகரியங்களில் இருப்பார்கள். இதையெல்லாம் கருத்தில் கொண்டு அல்லாஹ் தன் திருமறையில், அனுமதி இல்லையேல் திரும்பி விடுங்கள் என்று கூறுகின்றான்.

அங்கே எவரையும் நீங்கள் காணாவிட்டால் உங்களுக்கு அனுமதி அளிக்கப்படும் வரை அங்கே நுழையாதீர்கள்! “திரும்பி விடுங்கள்!” என்று உங்களுக்குக் கூறப்பட்டால் திரும்பி விடுங்கள்! அதுவே உங்களுக்குப் பரிசுத்தமானது. நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் அறிந்தவன். (அல்குர்ஆன் 24:28)

இந்தக் கட்டளையின் படி, உள்ளே வர அனுமதியில்லை என்றால் கண்ணியமான முறையில் திரும்பி விட வேண்டும். இன்று இது போல் வீட்டுக்கு வந்தவரிடம் வீட்டில் உள்ளவர் தெரிவித்து விட்டால் வந்தவர் கோபித்துக் கொள்கின்றார். நான் வாசல் தேடி வந்தேன்; உள்ளேயிருந்து கொண்டே என்னை வாசற்படியில் நிற்க வைத்தே அனுப்பி விட்டார்’ என்று வந்தவர் வீட்டுக்காரரைப் பற்றிக் குறை கூறிப் பொறுமுகின்றார். இந்த வசனத்தின் பொருளை உணர்ந்து கொண்டால் இந்தப் பொறுமலுக்கு அவர் இடமளிக்க மாட்டார்.



தெளிவாகப் பெயரைச் சொல்லுதல்
வாசலில் வந்து அனுமதி கேட்பவர், தான் இன்னார் என்று குறிப்பிட்டுத் தன் பெயரை தெளிவாகத் தெரிவிக்க வேண்டும். மொட்டையாக நான் தான்’ என்று கூறக் கூடாது.

என் தந்தை (ஒரு யூதருக்குக்) கொடுக்க வேண்டியிருந்த ஒரு கடன் விஷயமாக நபி (ஸல்) அவர்களிடம் நான் சென்று கதவைத் தட்டினேன். அப்போது அவர்கள், “யாரது?” என்று கேட்டார்கள். அதற்கு நான், “நான் தான்” என்றேன். அப்போது நபி (ஸல்) அவர்கள், “நான் தான் என்றால்…?” என்று அதை விரும்பாதவர்கள் போல் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)
நூல்: புகாரி 6250



மூன்று முக்கிய நேரங்கள்
கூட்டாக வாழ்கின்ற வாழ்க்கையில் நம்முடைய குழந்தைகளும் முக்கிய அங்கம் வகிக்கின்றனர். அவர்களுக்குரிய ஒழுங்கங்களையும் நாம் அவர்களுக்கு முறையாகக் கற்பிக்க வேண்டும். பின்வரும் வசனத்தில் மூன்று நேரங்களில் குழந்தைகள் கூட அனுமதி பெற்றுத் தான் வீட்டிற்குள் நுழைய வேண்டும் என இறைவன் கட்டளையிடுகின்றான்.

நம்பிக்கை கொண்டோரே! உங்கள் அடிமைகளும், உங்களில் பருவ வயதை அடையாதோரும் ஃபஜ்ரு தொழுகைக்கு முன்னரும், நண்பகலில் (உபரியான) உங்கள் ஆடைகளைக் களைந்துள்ள நேரத்திலும், இஷா தொழுகைக்குப் பிறகும் ஆகிய முன்று நேரங்களில் (வீட்டுக்குள் நுழைவதற்கு) உங்களிடம் அனுமதி கேட்கட்டும். இம்மூன்றும் உங்களுக்குரிய அந்தரங்க(நேர)ங்கள். இதன் பின்னர் அவர்கள் மீதோ, உங்கள் மீதோ எந்தக் குற்றமும் இல்லை. அவர்கள் உங்களைச் சுற்றி வருபவர்கள். உங்களில் ஒருவர் மற்றவரிடம் வந்து செல்பவர்கள். இவ்வாறே அல்லாஹ் வசனங்களைத் தெளிவுபடுத்துகிறான். அல்லாஹ் அறிந்தவன்; ஞானமிக்கவன்.
உங்களில் சிறுவர்கள் பருவ வயதை அடைந்து விட்டால் (வயதால்) அவர்களுக்கு முந்தியோர் அனுமதி கேட்பது போல் அவர்களும் அனுமதி கேட்க வேண்டும். இவ்வாறே அல்லாஹ் தனது வசனங்களை உங்களுக்குத் தெளிவுபடுத்துகிறான். அல்லாஹ் அறிந்தவன்; ஞானமிக்கவன். (அல்குர்ஆன் 24:57, 58)

இந்த நேரங்கள் பெண்கள் தங்கள் படுக்கைக்கு ஒதுங்குகின்ற அல்லது ஓய்வெடுக்கின்ற நேரங்களாகும். இந்நேரங்களில் வீட்டில் பணியாற்றும் அடிமைகள் மற்றும் பருவ வயதை அடையாத பாலகர்கள் கூட அனுமதி பெற்றுத் தான் வரவேண்டும் என்று அல்லாஹ் கூறுகின்றான் என்றால் மற்றவர்கள் அனுமதி பெறாமல் வரலாமா?



மூன்று முறை அனுமதி கோரல்
நான் அன்சாரிகளின் அவை ஒன்றில் அமர்ந்திருந்தேன். அப்போது பதற்றமடைந்தவரைப் போன்று அபூமூஸா (ரலி) அவர்கள் வந்தார்கள். “நான் உமர் (ரலி) அவர்களிடம் (அவர்களது வீட்டிற்குள் நுழைய) மூன்று முறை அனுமதி கேட்டேன். ஆனால் எனக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. ஆகவே நான் திரும்பி விட்டேன். பின்பு உமர் (ரலி), “(உங்களை வரச் சொல்லியிருந்தேனே) நீங்கள் ஏன் வரவில்லை?” என்று கேட்டார்கள். அதற்கு நான், “மூன்று முறை அனுமதி கேட்டேன். ஆனால் எனக்கு அனுமதியளிக்கப் படவில்லை. ஆகவே நான் திரும்பி வந்து விட்டேன். (ஏனெனில்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், உங்களில் ஒருவர் மூன்று முறை அனுமதி கேட்டும். அவருக்கு அனுமதி வழங்கப் படவில்லை என்றால் அவர் திரும்பி விடட்டும்’ என்று கூறியுள்ளார்கள்” என்று கூறினேன். அதற்கு உமர் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் மீதாணையாக! இதற்கு நீங்கள் சாட்சியைக் கொண்டு வர வேண்டும்” என்று கூறினார்கள். இதை நபி (ஸல்) அவர்களிடமிருந்து செவியேற்றவர் யாரேனும் உங்களில் உள்ளாரா?” என்று அபூமூஸா (ரலி) கேட்டார்கள்.

அதற்கு உபை பின் கஅப் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் மீதாணையாக! மக்களில் மிகச் சிறியவரே உங்களுடன் (இப்போது சாட்சி சொல்ல) வருவார்” என்று சொன்னார்கள். அங்கு நான் தான் மக்களில் சிறியவனாக இருந்தேன். எனவே நான் அபூமூஸா (ரலி) அவர்களுடன் சென்று, “நபி (ஸல்) அவர்கள் அவ்வாறு சொன்னார்கள்” என்று உமர் (ரலி) அவர்களிடம் தெரிவித்தேன்.
அறிவிப்பவர்: அபூஸயீத் அல்குத்ரீ (ரலி), நூல்: புகாரி 6245



பார்வையை உள்ளே செலுத்தாதிருத்தல்
ஒருவர் இன்னொருவர் வீட்டிற்கு வரும் போது, வீட்டில் நுழைவதற்கு அனுமதி பெறுவதற்கு முன், வீட்டுக்குள் பார்வையைச் செலுத்தக் கூடாது. வீட்டில் இருக்கும் அந்நியப் பெண்களின் மீது பார்வை பட்டு விடக் கூடாது என்பது தான் நபி (ஸல்) அவர்களது கட்டளையின் முக்கிய நோக்கமாகும். இதைப் பின்வரும் ஹதீஸ் தெரிவிக்கின்றது.

ஒரு மனிதர் ஒரு துவாரத்தின் வழியாக நபி (ஸல்) அவர்களின் வீட்டினுள் எட்டிப் பார்த்தார். அப்போது நபி (ஸல்) அவர்கள் ஈர்வலிச் சீப்பால் தமது தலையைக் கோதிக் கொண்டிருந்தார்கள். (அவர் எட்டிப் பார்ப்பதையறிந்த) நபி (ஸல்) அவர்கள், “நீ பார்த்துக் கொண்டிருக்கிறாய் என்று எனக்குத் தெரிந்திருந்தால் இந்த ஈர்வலியைக் கொண்டே உன் கண்ணைக் குத்தியிருப்பேன். (வீட்டுக்குள் நுழைய) அனுமதி கேட்க வேண்டும் என்று சட்டமாக்கப்பட்டதே பார்வைகள் (வரம்பு மீறி வீட்டிலுள்ளவர்கள் மீது விழக் கூடும் என்ற) காரணத்தினால் தான்” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஸஹ்ல் பின் ஸஅத் (ரலி), நூல்: புகாரி 5294



பார்வையைப் பறித்தாலும் பாவமில்லை
இதனையும் மீறி பார்வையை உள்ளே செலுத்துபவர் மீது கையில் இருப்பதை விட்டெறிந்து கண்ணைப் பறித்தால் கூட தப்பில்லை என்று சொல்லும் அளவுக்கு நபி (ஸல்) அவர்களது கட்டளை அமைந்துள்ளது.

ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களின் அறைகளில் ஒன்றின் வழியாக எட்டிப் பார்த்தார். (இதைக் கண்ட) நபி (ஸல்) அவர்கள் நீளமான அம்பின் கூர்முனையுடன் அவருக்குத் தெரியாமல் அவரை நோக்கிச் சென்று (அவருடைய கண்ணில்) குத்துவதற்குச் சென்றதை இப்போதும் நான் பார்ப்பது போல் உள்ளது.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
நூல்: புகாரி 6242

உன் அனுமதியின்றி ஒரு மனிதர் உன்னை எட்டிப் பார்த்த போது அவர் மீது நீ சிறு கல்லைச் சுண்டி எறிய, அது அவரது கண்ணைப் பறித்து விட்டால் உன் மீது எந்தக் குற்றமும் இல்லை என்று அபுல்காஸிம் (முஹம்மத்-ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரி 6902

அடுத்தவர் வீட்டுக்கு ஒருவர் செல்லுகையில் மேற்கண்ட அல்லாஹ்வின் கட்டளைகளையும், அவனது தூதருடைய கட்டளைகளையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.



திரையைத் தொங்க விடுதல்
வீட்டிற்கு வருபவருக்கென்று ஒழுங்கு முறைகள் இருப்பது போல் வீட்டில் உள்ளவருக்கும் அனுமதியளிக்கும் விஷயத்தில் வரைமுறைகள், ஒழுங்கு முறைகள் உள்ளன. வீட்டில் இருப்பவர்கள் வருவோர், போவோர், தெருவில் கடந்து செல்வோர் யாரும் பார்வைகளைச் செலுத்துவதற்கு வசதியாக வாசலைத் திறந்து வைத்துக் கொண்டிருக்கக் கூடாது. திரைகளைத் தொங்கப் போட்டு வைத்துக் கொள்ள வேண்டும்.
மேற்கண்ட வசனங்களிலும், ஹதீஸ்களிலும் வீட்டில் இருப்பவர்களும் இது போன்று அடுத்தவர் பார்வையில் படும்படி இருக்கக் கூடாது என்பதையும் சேர்த்தே தெரிவிக்கின்றன. நபி (ஸல்) அவர்களது வீட்டிலும், அவர்களது மகளார் பாத்திமா (ரலி) வீட்டிலும் திரைகள் தொங்கிக் கொண்டிருந்ததை புகாரி மற்றும் இதர நூல்களில் இடம் பெற்றுள்ள பல்வேறு ஹதீஸ்களில் நாம் காண முடிகின்றது.

தமிழகத்தின் சில பகுதிகளிலுள்ள முஸ்லிம் பெண்களிடம் ஒரு வழக்கம் உண்டு. அவர்கள் பேருந்துகளில் செல்லும் போது தாடி, தலைப்பாகையுடன் யாரேனும் பேருந்தில் ஏறினால் அப்பெண்கள் தங்கள் புர்க்காவை நன்கு இழுத்துப் போர்த்திக் கொள்வார்கள். வெட்கப்படுவதற்கு இவர்கள் மட்டும் தகுதியானவர்கள், மற்றவர்கள் கிடையாது என்ற போங்கில் இவர்களது இந்தச் செயல் அமைந்திருக்கும். அது போல் இன்று புர்கா சட்டத்தைப் பேணக் கூடிய முஸ்லிம்கள் குறிப்பாக குர்ஆன், ஹதீஸைப் பேணக் கூடியவர்களின் வீட்டிலும் ஒரு விநோதம் நடக்கின்றது.

ஓரளவுக்கு மார்க்கப் பற்றுள்ள முஸ்லிம்கள் வந்தால் ஒழுக்க மரியாதையுடன் முறைப்படி அனுமதி அளிக்கின்றனர். பேணுதலுடன் நடந்து கொள்கின்றனர். ஆனால் அதே சமயம் கார் டிரைவர்கள், கொத்தனார்கள், தச்சர்கள், காய்கறி வியாபாரிகள், பால்காரர்கள், பூக்காரர்கள், வளையல்காரர்கள், சிட்டை வட்டிக்காரர்கள், தங்கள் வயல்களில் உழும் விவசாயிகள், வயர்மேன்கள், பிளம்பர்கள் குறிப்பாக பொற்கொல்லர்கள் ஆகியோர் சர்வ சாதாரணமாக வீட்டிற்கு வந்து செல்கின்றார்கள். இவர்களைப் பெண்கள் கண்டு கொள்வதே கிடையாது. இத்தகையவர்கள் சமையலறை வரை சர்வ சாதாரணமாகப் பவனி வருகின்றார்கள்.

பெண்கள் அடுக்களையில் சமையல் பணியில் இருக்கும் போது முற்றிலும் தங்கள் ஆடைகளைச் சரி செய்து கொண்டு நிற்க இயலாது. இது போன்ற கட்டங்களைப் பெண்களும் வெட்கப்படுவதற்குரிய கட்டங்கள் என்று கருதுவது கிடையாது. இது போன்ற சந்தர்ப்பங்களில் அந்நிய ஆண்களை சர்வ சாதாரணமாக வீட்டிற்குள் அனுமதிப்பது இறைக் கட்டளைக்கு மாற்றமானதாகும்.
இதற்கெல்லாம் காரணம், அல்லாஹ்வின் கட்டளையை முழுமையாக உணர்ந்து செயல்படாதது தான்.

தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும் தமது கற்புகளைப் பேணிக் கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட பெண்களுக்குக் கூறுவீராக! அவர்கள் தமது அலங்காரத்தில் வெளியே தெரிபவை தவிர மற்றவற்றை வெளிப்படுத்த வேண்டாம். தமது முக்காடுகளை மார்பின் மேல் போட்டுக் கொள்ளட்டும். தமது கணவர்கள், தமது தந்தையர், தமது கணவர்களுடைய தந்தையர், தமது புதல்வர்கள், தமது கணவர்களின் புதல்வர்கள், தமது சகோதரர்கள், தமது சகோதரர்களின் புதல்வர்கள், தமது சகோதரிகளின் புதல்வர்கள், பெண்கள், தங்களுக்குச் சொந்தமான அடிமைகள், ஆண்களில் (தள்ளாத வயதின் காரணமாக பெண்கள் மீது) நாட்டமில்லாத பணியாளர்கள், பெண்களின் மறைவிடங்களை அறிந்து கொள்ளாத குழந்தைகள் தவிர மற்றவர்களிடம் தமது அலங்காரத்தை அவர்கள் வெளிப்படுத்த வேண்டாம். அவர்கள் மறைத்திருக்கும் அலங்காரம் அறியப்பட வேண்டுமென்பதற்காக தமது கால்களால் அடித்து நடக்க வேண்டாம். நம்பிக்கை கொண்டோரே! அனைவரும் அல்லாஹ்வை நோக்கித் திரும்புங்கள்! இதனால் வெற்றியடைவீர்கள்.
அல்குர்ஆன் 24:31

இந்த இறைக் கட்டளையைப் பெண்கள் பேணி நடக்க வேண்டும். இந்த இறைக் கட்டளைகளைப் பேணி நடந்தால் நம்முடைய கூட்டுக் குடும்ப வாழ்க்கை மிகச் சிறந்த வாழ்க்கையாக, ஒழுக்கமான வாழ்க்கையாக, மறுமையில் வெற்றி பெறக் கூடிய வாழ்க்கையாக அமையும் என்பதில் சந்தேகமில்லை

திருவாரூர் மமக மாநாடு

திருவாரூர் மாநாட்டில் நிறைவேற்றப் பட்ட தீர்மானங்கள்
-----------------------------------------------------------------


1. சிறுபாண்மையினருக்கு தேசிய அளவில் இடஒதுக்கீடு :

அரசுப்பணிகளில் சி று பா ன் மை யி ன ர் கு றி ப் பா க மு ஸ் லி ம் க ள் மி க வு ம் புறக்கணிக்கப்பட்டுள்ளதை நீதிபதி ராஜிந்தர் சச்சார் தலைமையில் அமைக்கப்பட்ட உயர்நிலை ஆய்வுக்குழு மத்திய அரசிடம் அறிக்கையாக சமர்பித்துள்ளது.

சிறுபாண்மை மக்களின் கல்வி, சமூக, பொருளாதார நிலைகள் குறித்து ஆய்வு செய்வதற்காக நியமிக்கப்பட்ட நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா ஆணையம் தெளிவான ஆய்வுகளுக்குப்பிறகு அரசுப்பணிகளில் சிறுபாண்மை மக்களுக்கு 15 சதவிகித இட ஒதுக்கீட்டையும் அதில் முஸ்லிம்களுக்கு 10 சதவிகித இட ஒதுக்கீட்டையும் பரிந்துரைத்துள்ளது. ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு கடந்த ஆட்சியில் அமைந்த ஆணைய பரிந்துரைகள் இப்போதும் ஆ ட் சி தொடரும் நிலையில் கண்டிப்பாக நிறைவேற்றப்பட வேண்டும் என இம்மாநாடு வலியுறுத்துகிறது. ச மூ க நீதியின் ச Vர ம் அடங்கிய ஆணைய பரிந்துரைகளை கா ல ம் தாழ்த்துவதும், ஏற்க மறுப்பதும் மிகப்பெரிய சமூக அநீதியாகவும், ஒடுக்கு முறையாகவும் அமையும் என இம்மாநாடு சுட்டிக்காட்டுகிறது.

2. விவசாயிகளின் பாதுகாப்பு:

மரபணு மாற்றம் செய்யப்பட்ட யவீ கத்திரிக்காய் ம க் க ளை நோயாளிகளாக்கி மண்ணையும் மலடாக்கக்கூடியவையாகும். வெளிநாட்டு விதை நிறுவனங்களின் சதி வலைகளில் விழுந்து சொந்த நாட்டு மக்களின் உடல் நலத்திற்கு உலை வைக்கத்துணிந்த மத்திய அமைச்சர் சரத்பவாரை இம்மாநாடு வண்மையாக கண்டிக்கிறது.யவீகத்திரிக்காய்களைஇந்திய மண்ணில் அனுமதிக்கக்கூடாது எனக் குரல் கொடுத்த மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷின் கருத்தை இம்மாநாடு வரவேற்கிறது.

மான்சாண்டோ நிறுவனத்தின் மரபணு மாற்றம் செய்யப்பட்ட பருத்தி விதைகள் ஆந்திர விவசாயிகளை தற்கொலைக்கு தள்ளின.

வெளிநாட்டு விதைகள் தாய்நாட்டின் மண்ணை த ரிசாக்கும் ஆயுத கணைகள் என்று எச்சரிப்பதோடு மரபணு மாற்ற விதைகளுக்கு மத்திய அரசு தடைவிதிக்க வேண்டும் என்றும் இம்மாநாடு வழியுறுத்துகிறது.


3. விவசாயிகளுக்கு உரிய கொள்முதல் விலை:

விவசாய நாடாகிய நம் நாட்டில் விவசாயிகளின் நிலை வேதனைக்குறியதாகவே தொடர்ந்து வருகிறது. இறக்குமதி கோதுமைக்கு அதிக விலை கொடுக்க எந்த ஆட்சேபனையும் இல்லை என அன்மையில் கூறிய மத்திய உணவு அமைச்சர் சரத்பவார் உள்நாட்டில் உற்பத்தியாகும் உணவு தாணியங்களுக்கு உரிய கொள்முதல் விலை கொடுக்க மறுத்து வருவது கொடுமையானதாகும். நெல் சாகுபடியாளர்களுக்கும், கரும்பு விவசாயிகளுக்கும்விவசாயிகள் நிர்ணயிக்கின்ற நியாயமான கொள்முதல் விலையை அரசாங்கம் கொடுக்கவேண்டும் என இம்மாநாடு வலியுறுத்துகிறது.



4. ஜோதிபாசுவுக்கு இரங்கல்:

மேற்கு வங்காளத்தில் 23 ஆண்டுகாலம் முதலமைச்சராக தொடர்ந்து சாதனை படைத்த கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர் ஜோதிபாசுவின் மறைவிற்கு இம்மாநாடு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கிறது. எளிமையும் நேர்மையும் கடும் உழைப்பும் கொண்ட அவரதுமறைவு இந்திய அரசியலுக்கு பெரும் இழப்பாகும்.

இந்தியாவின் பிரதமராகும் வாய்ப்பு வந்த போதும் தன் கட்சிக்கு கட்டுப்பட்டு பிரதமர் பொறுப்பை ஏற்க மறுத்த அ வ ர து நேர்மை மிகுந்த நிலைபாட்டை இம்மாநாடு பெருமையுடன் நினைவுகூர்கிறது.

5.குடும்ப அட்டை:

புதிய குடும்ப அட்டை கோரி விண்ணப்பித்தவர்களுக்கு ஓராண்டுகளுக்கு மேலாகியும் சரியான முறையில் புதிய குடும்ப அட்டை வினியோகிக்காததால் சம்மந்தப்பட்டவர்கள் அரசின் நலத்திட்டங்களை பயன்படுத்த முடியவில்லை. உடனடியாக சம்பந்தப்பட்டத் துறையினர் புதியகுடும்ப அட்டைகளை விரைந்து வினியோகிக்க இம்மாநாடு வற்புறுத்துகிறது.


6. சாதி, மதவெறியை தூண்டுபவர்களுக்குக் கண்டனம்:

நமது நாடு வேற்றுமையில் ஒற்றுமை என்ற பண்பாட்டை அடித்தளமாக கொண்டது. எனவே சாதிவெறி மதவெறியை தூண்டிவிடுபவர்களையும் அப்படி பொது இடங்களில் பேசுபவர்களையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டுமென இம்மாநாடு கோருகிறது.

7.திருவாரூருக்கு விமான நிலையம் தேவை:

தமிழகத்திலிருந்து வெளிநாடுகளுக்கு தொழில் நிமித்தமாகவும், வேலை நிமித்தமாக செல்பவர்களில் திருவாரூர் மற்றும் அதனை சுற்றியுள்ள நாகை, தஞ்சாவூர், புதுக்கோட்டை, கடலூர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்தவர்கள்தான் அதிகம் என்பதால் இம்மாவட்ட மக்களின் நலன் கருதி திருவாரூரில் விமான நிலையம் அமைக்க வேண்டும் என இம்மாநாடு கோருகிறது. விரைவில் மத்திய பல்கலை கழகமும், மருத்துவக்கல்லூரியும் திருவாரூரில் அமைய உள்ளதால் நாடு முழுவதிலுமிருந்து பேராசிரியர்களும், மாணவர்களும் வருகை தர இது உ த வு ம் என்பதால் மத்திய அ ர சு இக்கோரிக்கையை பரிசீலிக்க வேண்டு மென்று இம்மாநாடு கோருகிறது. இது காரைக்கால் மற்றும் நாகப்பட்டினத்தில் செயல்படும் துறைமுகங்களின் முன்னேற்றத்திற்கும், வளர்ச்சிக்கும் உதவியாக இருக்கும் என்பதால் தமிழக அரசு இவ்விசயத்தில் மத்திய அரசை நிர்பந்திக்க வேண்டுமென இம்மாநாடு கோருகிறது.



8.பாஸ்போர்ட் அலுவலகம்:

திருச்சி கிளை பாஸ்போர்ட் அலுவலகத்தில் எப்போதும் கூட்டம் நிரம்பி வழிவதால் திருவாரூர் மற்றும் அதனை சுற்றியுள்ள நாகை, தஞ்சை மாவட்டங்களை சேர்ந்த மக்கள் பாஸ்போர்ட் விண்ணப்பிக்கவும் அது தொடர்பான இதர வேலைகளை செய்து முடிப்பதற்கும் மிகவும் சிரமப்படுகிறார்கள். எனவே தஞ்சாவூரில் புதிய பாஸ்போர்ட் கிளை அலுவலகம்விரைந்து அமைக்க மத்திய அரசு உதவ வேண்டுமென இம்மாநாடு கோருகிறது.

9.இரயில் போக்குவரத்து:

நாகூரிலிருந்து திருவாரூர் வழியாக சென்று கொண்டிருந்த சென்னை, எர்ணாகுளம், பெங்களூர் செல்லும் இரயில்கள் அகல இரயில் பாதைக்காக நிருத்தப்பட்டன. இப்போது அகலஇரயில் பாதை பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில் மேற்கண்ட நகரங்களுக்கு மீண்டும் இரயில் போக்குவரத்தை துவங்க வேண்டும் என இரயில்வே அமைச்சகத்தை இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.

மேலும் நாகூர், வேளாங்கண்ணி, திருநள்ளாறு, தரங்கம்பாடி, பூம்புகார், கோடியக்கரை, முத்துப்பேட்டை போன்ற சுற்றுலா தளங்கள் சோழ மண்டலத்தில் இருப்பதால்,சுற்றுலாவையும்,தொழில் வளர்ச்சியையும் கருத்தில் கொண்டு நாகூர் அல்லது வேளாங்கண்ணியிலிருந்து நாகப்பட்டினம் திருவாரூர் வழியாக மும்பை, டெல்லி, கொல்கத்தா போன்ற நகரங்களுக்கு இரயில் போக்குவரத்தை ஏற்படுத்தி தருமாறு இரயில்வே அமைச்சகத்தை இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.

மயிலாடுதுறையிலிருந்து திருவாரூர் வழியாக காரைக்குடி சென்று கொண்டிருந்த இரயில் நிறுத்தப்பட்டுள்ளது. அகல இரயில் பாதை பணிகளை தீவிரப்படுத்தி விரைந்து அந்த இரயில் போக்குவரத்தை மீண்டும் தொடங்கி அதை மதுரை வரை நீட்டிக்க வேண்டும் என இம்மாநாடு இரயில்வே அமைச்சகத்தை கேட்டுக்கொள்கிறது.

10.மீனவர்களின் பிரச்சினை:

புதிய மீன்பிடி மசோதா ஒன்றை விரைவில் மத்திய அரசு அறிமுகப்படுத்த இருப்பதாக கூறப்படுகிறது. இச்சட்டம் மீனவர்களின் பாரம்பரிய உரிமையை பாதிப்பதோடு அவர்களின் வாழ்வுரிமையை பறித்து பன்னாட்டு நிறுவனங்களிடம் அடமானம் வைக்கும் மோசடி சட்டம் என்பதால் அதை எந்த வடிவிலும் மத்திய அரசு கொண்டு வரக்கூடாது என இம்மாநாடு எச்சரிக்கிறது.

தமிழக மீனவர்களை தொடர்ந்து தாக்கி உயிர்களையும் உடைமைகளையும் தொடர்ந்து பறித்து வரும் இலங்கை கடற்படையை இம்மாநாடு வன்மையாகக் கண்டிக்கிறது . இதனை தடுத்து நிறுத்தும் வகையில் சர்ச்சைக்குறிய கடற்பகுதியில் இந்திய கடற்படை ரோந்து சுற்றித மி ழ க மீனவர்களை காக்க வேண்டும் எ ன இம்மாநாடு ம த் தி ய மாநில அரசுகளை கேட்டுக்கொள்கிறது.

11. முல்லை பெரியாறு விவகாரம்:

முல்லை பெரியாறுக்கு குறுக்கே புதிய அணையை கட்ட நீதிமன்ற உத்தரவுகளையும் மீறி கேரள அரசு மறைமுக வேலைகளை தொடங்கி நடத்தி வருகிறது. இதற்கு மத்திய அரசு மறைமுகமாகத் துணைபோகிறதோ என்ற அய்யம் தமிழக மக்களுக்கு ஏற்பட்டிருக்கிறது. இவ்விசயத்தில் எந்த நிலையிலும் தமிழகத்தின் உரிமையை விட்டுக்கொடுக்க முடியாது என இம்மாநாடு பிரகடனப்படுத்துகிறது. மத்திய ஆட்சியில் பங்காளியாக இருக்கும் திமுக தனது செல்வாக்கை பயன் படுத்தி இவ்விசயத்தில் உறுதியாக செயல்பட வேண்டும் என்றும் அனைத்து கட்சிகளும் இத்தகைய முயற்சிக்கு ஆதரவாக இருக்க வேண்டுமென்றும் இம்மாநாடு அனைவரையும் கேட்டுக்கொள்கிறது.



12. புதிய பாலம் தேவை:

திருவாரூரில் பழைய நாகை சாலையிலுள்ள இரயில்வே லெவல் கிராசிங் அமைந்துள்ள சிறிய மேம்பாலத்தில் அடிக்கடி விபத்து நடப்பதாலும், பல உயிர்கள் பலியாகியுள்ளதாலும் அந்த பாலத்தை இடித்து விட்டு புதிய அகல மேம்பாலத்தை கட்டித்தருமாறு இம்மாநாடு அரசை வற்புறுத்துகிறது.

13. தடுப்பணைகள் தேவை:

காவிரி நதி கடலை நோக்கி ஓடிவரும் மாவட்டங்களான தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களில் மழைகாலத்தில் பல வீனிளீ தண்ணீர் கடலில் வீணாய் கலக்கிறது. இதை தடுக்கும் நோக்கிலும் திருவாரூர் மற்றும் தஞ்சை, நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் ஓடும் காவிரி ஆறு மற்றும் வாய்க்கால்களில் சிறிய தடுப்பணைகளை கட்ட நடவடிக்கை எடுக்குமாறு இம்மாநாடு தமிழக அரசை கேட்டுக்கொள்கிறது.

14. ஆட்டோ கட்டண கட்டுப்பாடு:

திருவாரூர் நகரில் ஓடும் ஆட்டோக்கள் வரம்பில்லாமல் அதிக கட்டணத்தை வசூலித்து வருவதாக பொது மக்கள் புகார் தெரிவிக்கின்றனர் மாவட்ட நிர்வாகமும் வட்டார போக்குவரத்து அதிகாரியும் தலையிட்டு ஆட்டோ மற்றும் டாக்ஸி கட்டணங்களை முறைப்படுத்த வேண்டுமென இம்மாநாடு வலியுறுத்துகிறது.

15. ரியல் எஸ்டேட்டுக்கு கட்டுப்பாடு:

விவசாயத்தில் தொடரும் சோதனைகளால் விரக்தி அடைந்த விவசாயிகளிடமிருந்து விளை நிலங்களை விலைக்கு வாங்கி ரியல் எஸ்டேட் செய்யப்படுவதை இம்மாநாடு கவலையுடன் சுட்டிக்காட்டுகிறது. விவசாய நிலங்கள் தொடர்ந்து ரியல் எஸ்டேட் தொழிலால் காங்கிரிட் பிரதேசங்களாக மாறினால் தேசம் மிகப்பெரிய உணவு நெருக்கடியை சந்திக்க நேரிடும் . எனவே விளை நிலங்களை பாதிக்கும் வகையில் ரியல் எஸ்டேட் போடுவதற்கு அரசு தடை விதிப்பதோடு அரசாங்கமும் விளை நிலங்களை கையகப்படுத்தக் கூடாது என இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.

16. மத்திய பல்கலை கழகம், மருத்துவக்கல்லூரி வரவேற்பு:

திருவாரூரில் மத்திய பல்கலைகழகமும் மருத்துவக் கல்லூரியும் அமைய முயற்சி எடுத்தமைக்காக தமிழக அரசுக்கு இம்மாநாடு நன்றி தெரிவிக்கிறது. கடைநிலையில் இருக்கின்ற மக்களுக்கு தரமான கல்வியும், மருத்துவமும் பரவலாக்கப்பட வேண்டுமென இம்மாநாடு வேண்டுகோள் விடுக்கிறது.

17. இலங்கை தமிழர் பாதுகாப்பு:

உள்நாட்டுப்போரால் சீரழிக்கப்பட்டுள்ள இலங்கையின் சிறுபான்மை மக்களான நம் தமிழ்ச் சொந்தங்களுக்கு இ ம் மா நா டு ஆதரவையும் ஆறுதலையும் தெரிவிக்கிறது.இலங்கையில் ஆயுதப்போராட்டம் முடிவுக்கு வந்துள்ள நிலையில் இலங்கை அரசு சிங்கள பேரின வாத வெறியுடன் தமிழர்களை நசுக்காதிருக்க இந்திய பேரரசு உளப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என இம்மாநாடு வழியுறுத்துகிறது. ஆயுத குழுக்களாலும் சிங்கள வெறியர்களாலும் சீரழிக்கப்பட்டுள்ள இலங்கையின் முஸ்லிம் தமிழர்கள், மலையக தமிழர்கள், ஈழத்தமிழர்கள் உள்ளிட்ட அனைத்து தமிழர்களின் வாழ்வுரிமையும், வாழ்க்கை பாதுகாப்பும் உறுதி செய்யப்பட இந்திய அரசு உரிய நடவடிக்கைகளை உடனே எடுக்க வேண்டும் எனவும் இம்மாநாடு வழியுறுத்துகிறது.

18.படுகுழிகளை மூட வேண்டும்:

பாதாள சாக்கடை திட்டம் என்ற பெயரில் திருவாரூர் முழுவதும் படுகுழிகளாக்கப்பட்டு அவை இன்னும் மூடப்படாமல் பொது மக்களுக்கு அபாயம் ஏற்படுத்திக் கொண்டிருப்பதை இம்மாநாடு வன்மையாக கண்டிக்கிறது. மேலும் திருவாரூரின் பல பகுதிகளிலும் வாகனங்கள் எளிதாக செல்ல முடியாத அவதி தொடர்ந்து வருகிறது. இதனால் நோயாளிகளும், கர்பிணிகளும், முதியவர்களும், மாணவர்களும் பெரும் துயரத்தை சந்தித்து வருகின்றனர். உடனடியாக திருவாரூர் நகராட்சி நிர்வாகம் தோண்டிய பள்ளங்களை மூடவேண்டும் என இம்மாநாடு வழியுறுத்துகிறது.

19. சேதுக்கால்வாய்:

ஆதிக்க சக்திகளுக்கு அஞ்சாமல் தமிழகத்திற்குப் பெரும் நன்மை பயக்கக்கூடிய சேதுக் கால்வாய்த் திட்டத்தை மத்திய அரசு உடனடியாக செயல்படுத்த வேண்டும் என இம்மாநாடு வலியுறுத்துகிது.

20.சிறுபான்மை பள்ளிகளில் பணியாற்றும் சுயநிதி பிரிவு ஆசிரியர்களுக்கு அரசு ஊதியம்:

தமிழகத்தில் கடந்த 20 ஆண்டுகளாக தரம் உயர்த்தப்பட்ட வகுப்புகள் மற்றும் புதிய பாடப்பிரிவுகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு ஊதியம் அளிப்பதற்கு அரசு மாணியம் அளிக்க மறுத்து வருகின்றது. அரசின் இந்த பாரபட்ச போக்கை இம்மாநாடு வண்மையாக கண்டிக்கிறது. இப்பள்ளிகள் பெரும்பாலும் தமிழ்வழி பள்ளிகளாகவும் மொழிவாரி சிறுபான்மையினர் நடத்தும் பள்ளிக்கூடங்களாக இருந்து வருகின்றன. தமிழ் செம்மொழி மாநாடு நடத்தும் தமிழக அரசு ஆண்டுக்கு ரூபாய் 100 கோடிக்கும் குறைவாகவே தேவைப்படும் மாணியத்தை வழங்கி தமிழ்வழி பள்ளிகளில் பணியாற்றும் சுயநிதி ஆசிரியர்களின் துயரத்தை நீக்க வேண்டுமென இம்மாநாடு கோருகின்றது.

21.பணநாயகமாக மாறியுள்ள ஜனநாயகம்:

உலகின் மிகப்பெரும் ஜனநாயகமான இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் நடைபெறும் தேர்தல்களில் பணம் ஜனநாயகத்தை குழித் தோண்டி புதைக்கும் அவல நிலையை நீக்க இரும்பு கரம் கொண்டு தேர்தல் ஆணையம் செயல்பட வேண்டுமென இம்மாநாடு கோருகின்றது.

22. தேசிய ஊரக வேலை வாய்ப்புத்திட்டத்தில் ஆண்டுக்கு 200 நாள் வேலை கொடுக்க வேண்டும். ஒருநாள் கூலி ரூபாய் 150/- கொடுக்க வேண்டும். மேற்படி வேலை உறுதி திட்டத்தில் நடைபெறும் முறைகேடுகளை களைய வேண்டும். ஊழலற்ற திட்டம் என்பதை உறுதி செய்ய வேண்டும்.

23. குடியிருக்க இடம் இல்லாத பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மை, ஆதிதிராவிட மக்களுக்கு அரசு வழங்கிய இலவச துவீட்டு மனைகளை அதிகாரிகளே அபகறித்துக் கொள்வதை தடுத்து ஒடுக்கப்பட்ட உழைக்கும் மக்களுக்கு இலவச வீட்டுமனைகள் கொடுக்க அரசு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.




_____________________________________________________________________________________


மாநாட்டு துளிகள்!


* உளவுத்துறை அதிகாரி ஒருவர் ம.ம.க மாவட்டச் செயலாளர் முஜிபுர் ரஹ்மானிடம், ‘கடும் பனியிலும் கடைசிவரை கலையாமல் இருந்த கூட்டம் எங்களை ஆச்சரியப்படுத்தியது, என்று கூறியுள்ளார்.

* திருவாரூர் மோதிலால் ஆஸ்வால் நிறுவன நிர்வாக இயக்குநர், ஃபெரோஷ் ஷா, கூறும்போது, கடைசிவரை கலையாமல் இப்படி ஒரு பெருந்திரளை தெற்கு வீதியில் நான் பார்த்தது இப்போது தான் என்று கூறியுள்ளார்.

* வாகன வசதிகளை மாநாடு நடத்து பவர்கள் செய்து கொடுக்காவிட்டாலும், நாங்களாகவே வாகனம் எடுத்துக் கொண்டு வந்தோம் ஆண்களோ கலக்காமல், பெண்களுக்குத் தனியாக இடம் ஒதுக்கி வசதி செய்து தந்ததும், பெரிய அளவில் பெண்கள் பங்கேற்றதும் மாநாட்டின் சிறப்பு என்கிறார் திருவாரூரைச் சேர்ந்த ஜுலைகா .

* தெற்கு விதியைச் சேர்ந்த புகழ்பெற்ற மூத்த வழக்கறிஞர் ஒருவர், ‘முஸ்லிம் கட்சி என்று அறியப்பட்டாலும், உங்கள் மாநாட்டில் பேசப்பட்டக் கருத்துகள், எதிர்கால அரசியலில், உங்களுக்கு மிக முக்கியமான இடம் உண்டு, என்பதற்கு முன்னோட்டமாக இருந்தது என்றார்.

* மாநில மாநாடுகள் நடத்தும் போதுதான் இதுபோன்ற கூட்டம் திரளும், திருவாரூரில் இவ்வளவு பெரிய கூட்டத்தைக் காணும் வாய்ப்பு எங்களுக்கு கிடைத்தது, மகிழ்ச்சியாக இருக்கிறது என்றார். கொடிக்கால் பாளையத் தைச் சேர்ந்த சபுரன் ஜமீலா.

* மாநாட்டில் இளைஞர் அணிக் கான சீறுடையுடன் நூற்றுக் கணக்கானோர் சுழன்று இயங்கினர்.

* மேடையை சுற்றிலும் இளைஞர் அணியிலிருந்து தேர்ந்தெடுக்க 15 பேர் சிறப்பு பாதுகாப்பு படையாக உருவாக்கப்பட்டு அவர் கள் மேடையை சுற்றிலும் நிறுத் தப்பட்டிருந்தனர்.

* வாகனங்களை ஒழுங்குப் படுத்தும் விதமாக வாக்கி, டாக்கி கருவிகளுடன் இளைஞர் அணியினர் செயல்பட்டதால், பணிகள் தகவல் தொடர்புகளுடன் துல்லியமாக மேற் கொள்ளப்பட்டது.

* பல்வேறு ஊர்களை சேர்ந்த ஜமாத் நிர்வாகிகள் மேடைக்கு வந்து அமர்ந்து தங்களது ஆதரவை தெரிவித்தனர்.

* பல தீர்மானங்கள் உற்சாகத் தோடு வரவேற்கப்பட, திருவாரூக்கு விமான நிலையமும், தஞ்சாவூருக்கு புதிய பாஸ்போர்ட் கிளை அலுவலகமும் தேவை என்ற தீர்மானமும் வாசிக்கப்பட்டப் போது மாநாட்டில் பெரும் ஆரவாரம் எழுந்தது. அதாவது இப்பகுதி மக்களின் வெளிநாட்டு வாழ்க்கையின் தாக்கத்தை உணர முடிந்தது.

* கூட்டம் கட்டுக் கடங்காமல் போக பேருந்து நிலையம் மற்றும் சுவர்களிலும் கூட்டம் ஏறி நின்று கொண்டிருந்தது.

* மமகவின் காலண்டர்களுக்கு மாநாட்டில் நல்ல வரவேற்பு இருந்தது. அதுபோல் புத்தக கடைகளும், சி.டி கடைகளும் கூட்டமயமாக இருந்தது.

* மாநாட்டு நிகழ்ச்சிகளை படப் பிடிப்புக்கு பயன்படுத்தப்படும் கருவி களும், நான்கு கேமராக்கள் சுழன்று சுழன்று படம்பிடித்துக் கொண்டிருந்தது. அரை கிலோ மீட்டர் நீளமான அந்த அகலமான வீதியில் ஆங்காங்கே டிஜிட்டல் திரைகள் வைக்கப்பட்டு, சிரமமின்றி மாநாட்டு நிகழ்ச்சிகளை பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது